பூமியனைத்திற்கும் ஒரு புதுப்பாடல்
இந்தப் புதிய பாடல் மிஷனரிப் பாடல் — நமது பிதாவின் செயல்களை ஜாதிகளுக்குள் அறிவியுங்கள், காணிக்கை கொண்டுவாருங்கள், அவர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று சொல்லுங்கள். மற்ற தெய்வங்கள் கையால் செய்யப்பட்ட வீணானவைகள். சமுத்திரமும், வயல்வெளிகளும், காட்டின் மரங்களும்கூட வருகிற நியாயாதிபதியை ஆரவாரித்து வரவேற்க அழைக்கப்படுகின்றன.
96 1எங்கள் பிதாவைப் பாடி, புதுப்பாடல் பாடுங்கள்; பூமியனைத்துமே, எங்கள் பிதாவைப் பாடுங்கள்.
2எங்கள் பிதாவைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்; அவருடைய இரட்சிப்பை நாளுக்குநாள் அறிவியுங்கள். 3அவருடைய மகிமையான செயல்களை ஜாதிகளுக்குள்ளும், அவருடைய அற்புதமான கிரியைகளை எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரசித்தப்படுத்துங்கள். 4எங்கள் பிதா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களைப்பார்க்கிலும் அவருக்கே பயப்படவேண்டும். 5ஜனங்களுடைய தேவர்கள் யாவும் விக்கிரகங்களே, ஆனால் எங்கள் பிதா வானங்களை உண்டாக்கினார். 6மகிமையும் மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் அழகும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறது.
7ஜனங்களின் வம்சங்களே, எல்லாரும் எங்கள் பிதாவுக்குச் செலுத்துங்கள்; மகிமையையும் வல்லமையையும் எங்கள் பிதாவுக்குச் செலுத்துங்கள். 8எங்கள் பிதாவின் நாமத்திற்கு ஏற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். 9பரிசுத்தத்தின் மகிமையில் எங்கள் பிதாவைத் தொழுதுகொள்ளுங்கள்; பூமியனைத்துமே, அவர் சமுகத்தில் நடுங்குங்கள். 10“எங்கள் பிதா ராஜ்யபாரம்பண்ணுகிறார்! பூலோகம் அசையாதபடி உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது; அது ஒருபோதும் அசைக்கப்படாது. அவர் ஜனங்களை நியாயமாய் நியாயந்தீர்ப்பார்” என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
11வானங்கள் மகிழ்வதாக, பூமி களிகூருவதாக; சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. 12வயலும் அதிலுள்ள யாவும் ஆனந்தித்துக் களிகூருவதாக; அப்பொழுது காட்டின் மரங்களெல்லாம் கெம்பீரமாய்ப் பாடும். 13எங்கள் பிதாவின் சமுகத்தில் பாடுங்கள், அவர் வருகிறார், பூமியை நியாயந்தீர்க்க அவர் வருகிறார். அவர் பூலோகத்தை நீதியாயும், ஜனங்களைத் தமது உண்மையின்படியும் நியாயந்தீர்ப்பார்.