ஈசாக்குக்குப் புதுப்பிக்கப்பட்ட வாக்குத்தத்தம்
பஞ்சம் மீண்டும் வருகிறது; ஈசாக்கு தன் மனைவியைக் குறித்துத் தன் தகப்பன் சொன்ன அதே பொய்யைச் சொல்லிப் பிடிபடுகிறான். எங்கள் பிதா அவனை ஆசீர்வதிப்பதால் அவன் செல்வந்தனாகிறான்; அவனுடைய கிணறுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பறிக்கப்படுகின்றன; கடைசியில் ஒருவரும் சண்டையிடாத இடத்தில் தோண்டுகிறான். பின்பு அவன்மேல் பொறாமைகொண்ட ராஜாவே உடன்படிக்கை கேட்டு வருகிறான்.
26 1ஆபிரகாமின் நாட்களில் உண்டான முந்தின பஞ்சம் அல்லாமல், அந்த தேசத்தில் மறுபடியும் ஒரு பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்திற்குக் கேராருக்குப் போனான்.
2எங்கள் பிதா அவனுக்குத் தரிசனமாகி, “நீ எகிப்திற்குப் போகாதே; நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு. 3இந்தத் தேசத்தில் தங்கியிரு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த தேசங்களையெல்லாம் தருவேன்; உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். 4உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்த தேசங்களையெல்லாம் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்; 5ஏனெனில், ஆபிரகாம் என் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, என் கட்டளையையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டான்” என்றார்.
6அப்படியே ஈசாக்கு கேராரில் குடியிருந்தான். 7அவ்விடத்து மனிதர் அவன் மனைவியைக் குறித்து விசாரித்தபோது, அவன், “இவள் என் சகோதரி” என்றான்; “ரெபெக்காள் அழகுள்ளவளானதால், இவளுக்காக இவ்விடத்து மனிதர் என்னைக் கொன்றுபோடுவார்கள்” என்று நினைத்து, “என் மனைவி” என்று சொல்லப் பயந்தான். 8அவன் அங்கே அநேக நாட்கள் தங்கியிருந்தபின், பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளைத் தழுவிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். 9அப்பொழுது அபிமெலேக்கு ஈசாக்கை அழைப்பித்து, “இவள் நிச்சயமாய் உன் மனைவியாயிருக்கிறாளே; பின்னை ஏன் ‘இவள் என் சகோதரி’ என்று சொன்னாய்?” என்றான். அதற்கு ஈசாக்கு, “இவளுக்காக நான் சாகநேரிடும் என்று நினைத்தேன்” என்றான்.
10அப்பொழுது அபிமெலேக்கு, “நீ எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களில் ஒருவன் உன் மனைவியோடே சயனித்திருக்கக்கூடுமே; அப்பொழுது எங்கள்மேல் குற்றத்தை வருவித்திருப்பாயே” என்றான். 11பின்பு அபிமெலேக்கு எல்லா ஜனங்களையும் நோக்கி, “இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான்” என்று கட்டளையிட்டான்.
12ஈசாக்கு அந்த தேசத்தில் விதைத்தான்; எங்கள் பிதா அவனை ஆசீர்வதித்ததால், அந்த வருஷத்தில் நூறத்தனையாகப் பலனடைந்தான். 13அந்த மனிதன் மேன்மேலும் விருத்தியடைந்து, மிகவும் செல்வந்தனாகும்வரைக்கும் தொடர்ந்து பெருகினான். 14அவனுக்கு ஆட்டுமந்தைகளும், மாட்டுமந்தைகளும், திரளான வேலைக்காரரும் இருந்தார்கள்; ஆகையால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள். 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவன் தகப்பனுடைய வேலைக்காரர் வெட்டியிருந்த கிணறுகளையெல்லாம் பெலிஸ்தர் மண்ணைப் போட்டு நிரப்பிப்போட்டார்கள். 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி, “நீ எங்களைப்பார்க்கிலும் மிகவும் பலத்தவனானதால், எங்களைவிட்டுப் போய்விடு” என்றான்.
17அப்பொழுது ஈசாக்கு அவ்விடத்தைவிட்டுப் போய், கேரார் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு அங்கே குடியிருந்தான். 18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டதும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டதுமான தண்ணீர்க் கிணறுகளை ஈசாக்கு மறுபடியும் வெட்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19ஈசாக்கின் வேலைக்காரர் அந்தப் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே ஊற்றுத் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டார்கள். 20அப்பொழுது கேராரின் மேய்ப்பர் ஈசாக்கின் மேய்ப்பரோடே, “இந்தத் தண்ணீர் எங்களுடையது” என்று வாக்குவாதம் பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினதால், அவன் அந்தக் கிணற்றுக்கு ஏசெக் என்று பேரிட்டான். a a v20 ஏசெக் என்னும் பேரின் அர்த்தம் “வாக்குவாதம்” என்பதாம். 21பின்பு அவர்கள் வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் பண்ணினார்கள்; ஆகையால் அவன் அதற்கு சித்னா என்று பேரிட்டான். b b v21 சித்னா என்னும் பேரின் அர்த்தம் “விரோதம்” என்பதாம். 22பின்பு அவன் அவ்விடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; ஆகையால் அவன், “இப்பொழுது எங்கள் பிதா நமக்கு இடமுண்டாக்கினார்; இந்த தேசத்திலே நாம் பலுகுவோம்” என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். c c v22 ரெகொபோத் என்னும் பேரின் அர்த்தம் “இடம்” அல்லது “விசாலமான இடங்கள்” என்பதாம்.
23பின்பு அவன் அவ்விடத்தைவிட்டு பெயெர்செபாவுக்குப் போனான்.
24அன்று இராத்திரியில் எங்கள் பிதா அவனுக்குத் தரிசனமாகி, “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவன்; பயப்படாதே, நான் உன்னோடேகூட இருக்கிறேன்; என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
25அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, எங்கள் பிதாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான்; அவ்விடத்திலே ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு கிணற்றை வெட்டினார்கள்.
26அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆலோசனைக்காரனாகிய அகுசாத்தையும், தன் சேனாபதியாகிய பிகோலையும் கூட்டிக்கொண்டு, கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தான். 27ஈசாக்கு அவர்களை நோக்கி, “நீங்கள் என்னைப் பகைத்து, உங்களிடத்திலிருந்து என்னைத் துரத்திவிட்டிருந்தும், என்னிடத்தில் ஏன் வந்தீர்கள்?” என்றான்.
28அதற்கு அவர்கள், “தேவன் உம்மோடே இருக்கிறார் என்பதைத் தெளிவாய்க் கண்டோம்; ஆகையால், ‘நமக்குள்ளே, அதாவது எங்களுக்கும் உமக்கும் நடுவே ஒரு ஆணை உண்டாகவேண்டும்; உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்வோம்’ என்று சொன்னோம்; 29நாங்கள் உம்மைத் தொடாமல், உமக்கு நன்மையே செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குப் பொல்லாப்பு ஒன்றும் செய்யாதிருக்கவேண்டும்; இப்பொழுது நீர் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிறீரே” என்றார்கள்.
30அப்பொழுது அவன் அவர்களுக்கு ஒரு விருந்துபண்ணினான்; அவர்கள் புசித்துக் குடித்தார்கள். 31மறுநாள் அதிகாலமே எழுந்து, ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள்; பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். 32அன்றையதினமே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் வெட்டின கிணற்றைக்குறித்து அவனுக்கு அறிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள். 33அப்பொழுது அவன் அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆதலால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்று வழங்கிவருகிறது. d d v33 சேபா என்பதின் அர்த்தம் ‘ஆணை’ என்பதாம்; பெயெர்செபா என்பதின் அர்த்தம் ‘ஆணையின் கிணறு’ என்பதாம்.
34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனாகிய பேரியின் குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனாகிய ஏலோனின் குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். 35இவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனதுக்கமாயிருந்தார்கள்.